தேனி மாவட்டம், ஆண்டிபட்டி 71அடி உயரம் உள்ள வைகை அணையில் இருந்து மதுரை திண்டுக்கல் சிவகங்கை மாவட்டத்தில் 1 லட்சத்து 5 ஆயிரத்தி இரண்டு ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் திறந்து வைத்தனர்.
தண்ணீர் திறப்பின் போது ,அணை பகுதியில் இருந்த ராட்ஷத தேன் கூடு கலைந்தது. இதன் காரணமாக அங்கிருந்தவர்கள் ஏராளமானோர் ஓட்டம் பிடித்தனர். அங்கிருந்த பலரையும் தேனீர் தாக்கியது. தேனீக்கள் படையெடுத்ததால் ,முழுமையாக அடுத்தடுத்த ஷட்டர் களை திறக்கமுடியவில்லை. மேலும், அமைச்சர்கள் ஆட்சியர் தண்ணீரில் மலர் தூவியும் வரவேற்க முடியாமல் போனது.
தேனீக்கள் தாக்கியதில் வைகை அணையில் பணிபுரியும் பொதுப்பணித்துறை தற்காலிக பணியாளர் பாண்டித்துரை, அணை பகுதியிலே மயக்கம் அடைந்தார்.மேலும், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் குபேந்திரன் உட்பட ஐந்துக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.