ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களை தவிர்க்க வேண்டும் என்ற பிரசாரம் துவங்கி உள்ள நிலையில், பாட்டில் குடிநீருக்கு மாற்று கண்டிபிடிக்கும் படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்.
ஆக.,30 ம் தேதி அதிகாரிகள் மற்றும் அமைச்சகள் குழுவுடன் பஸ்வான் ஆலோசனை நடத்தினார். அப்போது குடிநீர் மற்றும் சுகாதார செயலாளர் பரமேஸ்வரன் ஐயர் விரிவான அறிக்கை ஒன்றை அளித்திருந்தார். அது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பஸ்வான், பாட்டில் குடிநீர் பயன்படுத்துவது நகர்புறங்களில் அத்தியாவசியமாகி உள்ளது. குழாயில் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் 100 சதவீதம் பாதுகாப்பானதாக இல்லை. இது மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும்.
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் ஆபத்தை எடுத்துரைத்தார். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார். ஆனால் பாட்டில் குடிநீர் தயாரிக்க பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கே பயன்படுத்தப்படுகிறது. பாட்டில் குடிநீர் அத்தியாவசியம் என ஆகி விட்ட நிலையில், அதற்கு மாற்று கண்டுபிடித்தாக வேண்டும். விரைவில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து தீர்வு காணப்படும் என்றார்.














