நெல்லை மாவட்டம் திசையன்விளையில் மாணவர்களை பள்ளி நிர்வாகமே அழைத்து வந்து பூஜை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து விடுமுறை நாளில் பள்ளி மாணவர்களை அழைத்து பூஜை நடத்தும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திசையன்விளை சுடலை ஆண்டவர் ஆலயத்தில் ஹயக்ரீவர் வித்யா பூஜை என்ற பெயரில் பள்ளி மாணவ மாணவியருக்காக விடுமுறை நாளான இன்று பூஜை நடத்தி பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ‘இந்த பூஜையில் கலந்து கொள்ளுங்கள். பஸ்ஸில் அழைத்துச் செல்கிறோம். மதிய உணவு உண்டு ‘ என்று அந்த ஊரின் இரு மேல்நிலைப்பள்ளிகளின் நிர்வாகமே மாணவர்களிடம் அறிவிப்பு செய்துள்ளது.
அதன்படியே இன்று காலை மாணவர்கள் அழைத்து வரப்பட்டு பூஜை நடந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் சென்றதால்,’ விடுமுறை நாளில் மாணவர்களை பள்ளி நிர்வாகமே தனிப்பட்ட பூஜைக்காக அழைத்துச் செல்வது தவறு. அப்படி நடந்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கல்வித்துறைக்கும் காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளார்.













