நெல்லை மாவட்டம் களக்காட்டில் நீட் பயிற்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (40). பாத்திர வியாபாரியான இவருக்கு மனைவி ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் முத்துலட்சுமி (19). களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு படித்து முடித்து நீட் தேர்வு எழுதுவதற்காக நெல்லை உள்ள தனியார் பயிற்சி மையத்தில்
பயின்று வந்துள்ளார். அதன்பின் நீட் தேர்வில் வெற்றி பெறாத நிலையில் இரண்டாவது முறையாகவும் இந்த ஆண்டு வேறொரு பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முத்துலட்சுமி பயிற்சி மையம் செல்ல விருப்பம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை மணிகண்டன் வியாபாரத்திற்காக வெளியூர் சென்ற நிலையில் வீட்டில் உள்ள அறையில் இருந்த முத்து லட்சுமி சேலையில் தூக்கிட்டு தொங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த அவரது தாயார் கூச்சலிடவே அங்கு வந்த உறவினர்கள் அவரை தூக்கிலிருந்து விடுவித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு முத்துலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக
தெரிவித்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள குளிரூட்டு மையத்தில் வைக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த களக்காடு போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு பயிற்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் களக்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.