கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணி.
இவர் அந்தோணி டிரேடர்ஸ் என்ற பெயரில் கோவில்பட்டி அருகே சிவந்திபட்டி மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மீன் அரவை தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.
மீன், இறால், பதப்படுத்தப்பட்ட மீன் எலும்புகள் உள்ளிட்ட கடல் சார் உணவு பொருட்களை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இத்தகைய சூழலில் தான் இவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் மதுரையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அந்தோனிக்கு சொந்தமான சிவந்திபட்டி மீன் அரவை குடோன் கோவில்பட்டியில் உள்ள அலுவலகம் மற்றும் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று (06.11.2024) மாலை முதல் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையானது இரவு வரை நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது. கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.