திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே விஜயநாராயணம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெங்கட்ராயபுரம் குளத்தில் மணல் திருடுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து இரவு காவல் துறையினர் அங்கு விரைந்தனர் . அப்போது மணல் திருடிக் கொண்டிருந்தவர்கள் ஜேசிபி மற்றும் இருசக்கர வாகனத்தை அந்த இடத்தில் போட்டு விட்டு ஓடினர்.
ஜேசிபி மற்றும் இருசக்கர வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த காவலர்கள் மணல் திருட்டில் ஈடுபட்டதாக கங்கை ஆதித்தன் என்பவரை கைது செய்ய இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர்.
அப்போது குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி மற்றும் நண்பர்கள் கைது செய்வதை தடுத்ததால் நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னகுமார் தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூட்டத்தை கலைத்து கதவை உடைத்து கங்கை ஆதித்தனை கைது செய்தனர்.
அப்போது கங்கை ஆதித்தனின் மனைவி, போலீசார் தன்னை சாதியைச் சொல்லி திட்டியதாக கூறினார். அதை மறுத்த போலீசார், ‘ நீங்கள் எந்த ஜாதி என்று கூட எங்களுக்கு தெரியாது’ என்று கூறினர்.
குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய நான்கு மணி நேரம் ஆனதாகவும் , அவர் தான் கைது செய்யப்படாமல் தப்பிப்பதற்காக ஆடையை கழற்றி விட்டு நிர்வாணமாக தப்பிக்க முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட கங்கை ஆதித்தன் திமுகவின் முன்னாள் மாவட்ட பிரதிநிதி. தற்போது மாவட்ட அணி ஒன்றில் துணை பொறுப்பாளராக உள்ளார்.









