தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மின்சார வாகனத்திற்கு சார்ஜ் போடும் போது திடீரென பேட்டரி வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் நிறுத்தியிருந்த வாகனங்களுக்கும் தீப்பற்றியது. மேலும் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்து புகை மண்டலமாக மாறியது.
இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறியடித்து வெளியே சென்றனர். பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.








