நிலவை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), சந்திரயான்-2 என்ற விண்கலத்தை ராக்கெட் மூலம் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி விண்ணில் ஏவியது.
விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கியதுதான் சந்திரயான்-2 விண்கலம். விண்கலம் நிலவை நெருங்கியதை தொடர்ந்து ஆர்பிட்டரில் இருந்து, பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் கடந்த 2-ந் தேதி தனியாக பிரிந்தது. படிப்படியாக லேண்டரை நிலவின் மேற்பரப்பை நோக்கி இறக்கி வந்தது.
செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 1.45 மணியளவில், சந்திர மேற்பரப்பில் இறங்குவதற்கு 12 நிமிடங்களுக்கு முன் , லேண்டர் பூமியுடனான தொடர்பை இழந்தது. இது அதன் பாதையிலிருந்து விலகி சந்திரனில் விழுந்ததாக நம்பப்படுகிறது. செப்டம்பர் 8 ஆம் தேதி சந்திரனில் லேண்டர் விக்ரம் எங்குள்ளது மற்றும் லேண்டரின் நிலை என்ன என்பது குறித்த தெளிவான படம் எடுப்பதற்கான முயற்சியை ஆய்வு செய்தது இஸ்ரோ .
நிலவில் விக்ரம் லேண்டர் இறக்க திட்டமிடப்பட்ட இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டர் விழுந்து உள்ளது. இதனை இஸ்ரோ சிவன் தெரிவித்து உள்ளார்.
முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி சந்திர பூமத்திய ரேகைக்கு 70 டிகிரி தெற்கிலும் சந்திர தென் துருவத்திலிருந்து 600 கி.மீ தொலைவிலும் இருந்தது.
செப்டம்பர் 8 ம் தேதி, லேண்டருடனான தொடர்பை மீட்டெடுக்க இஸ்ரோ முயற்சி எடுத்து வருவதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.
“சந்திர மேற்பரப்பில் லேண்டர் விக்ரமின் இருப்பிடத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம். சுற்றுப்பாதையில் உள்ள ஆர்பிட்டர், அதன் படத்தைக் கிளிக் செய்துள்ளது. அதனுடன் தொடர்பை மீண்டும் தொடர முயற்சிக்கிறோம் என கூறினார்.
சுற்றுப்பாதையில் உள்ள சந்திராயன் விண்கலத்தில் 30-செ.மீ தெளிவுத்திறன் கொண்ட சிறந்த ஆர்பிட்டரில் உயர் தெளிவுத்திறன் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உணர்ச்சிகரமான ஒரு கடிதத்தை எழுதியுள்ளார், 10 வயதான ஆஞ்சநேய கவுல் என்ற சிறுவன். இந்தக் கடிதத்தை அவரின் தாய் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது.
சிறுவன் எழுதியுள்ள கடிதத்தில், “ ஒரு நன்றியுள்ள இந்தியரின் உணர்வுகள். மனம் தளர்ந்து விடாதீர்கள்! நாம் நிச்சயம் நிலவைத் தொடுவோம். ஆர்பிட்டர் இன்னும் அங்கேதான் உள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம். அது நமக்கு புகைப்படங்களை அனுப்பும்.
அடுத்தபடியாக நாம் எங்கு செல்ல வேண்டும் என்பன போன்ற அனைத்து விஷயங்களையும் அது காட்டும். விக்ரம் லேண்டர் ஒருவேளை நிலவில் தரையிறங்கியிருக்கலாம் மற்றும் பிரக்யான் ஆர்பிட்டர் இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது. இனி அதிலிருந்து வரும் கிராஃபிக்கல் விவரங்களைப் பெறத் தயாராக இருப்போம். அப்படி நடந்துவிட்டால் வெற்றி நமது கைகளில்தான் உள்ளது.
இந்தியாவின் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு இஸ்ரோ தான் உத்வேகம். இஸ்ரோ நீங்கள் எங்கள் பெருமை, நன்றியுள்ள தேசத்தின் இதயபூர்வமான நன்றிகள். ஜெய்ஹிந்த்” எனக் குறிப்பிட்டுள்ளார்.