சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்கிணற்றில் இளம் பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டார். அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிர் பிழைப்பது கஷ்டம் எனக் கூறப்பட்டதால் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியாமலே ஊருக்கு கொண்டு வந்து விட்டனர். அந்தப் பெண் இன்று இறந்தார்.
இறையறிந்த சாத்தான்குளம் காவல்துறையினர் இளம்பெண்ணின் உடலை போஸ்ட்மாட்டம் செய்யவேண்டும் என்று கூறி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் அங்கு தான் போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்று கூறி உடற்கூறு பரிசோதனைக்கு மறுத்தார்.இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைப் போல, முதலூர் ஊருணியில் விழுந்து இறந்த ஜெயலட்சுமி என்ற பெண்ணுக்கும் உடற்கூறு பரிசோதனை செய்யப்படாததால், அப்பகுதி மக்களும் சாலை மறியலில் கலந்து கொண்டனர்.
ஊருணியில் விழுந்து இறந்த ஜெயலட்சுமி உடலை நேற்று இரவு எட்டு மணிக்கே கைப்பற்றியுள்ளனர். சாத்தான்குளம் மருத்துவமனையில் ‘ஃபிரீசர்’ வசதி இல்லாததால் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு இன்று மாலை வரை வைத்து விட்டு, உறவினர்களை அலைக்கழித்து, இறுதியாக, ‘சாத்தான்குளம் பகுதியில் இறந்ததால் அங்கு தான் போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும்’ என்று கூறி அனுப்பியுள்ளனர்.
இவ்வாறாக, திருச்செந்தூர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியல் தொடர்ந்தது. இதனால் சாத்தான்குளம் – திருச்செந்தூர் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தாசில்தார் ரதி கலா, டிஎஸ்பி அருள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, . நாளை போஸ்ட்மார்ட்டம் செய்து தருவதாக உறுதி அளித்தனர் . இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது









