சாத்தான்குளத்தில் இருந்து கலுங்கு விளை வழியாக திருநெல்வேலிக்கு இயக்கப்படும் 165 எச் பேருந்து வாரத்திற்கு இரு நாட்கள் மாயமாகிவிடும். அவை விடுமுறை நாட்கள் என்றால் கூட பரவாயில்லை, பள்ளி நாட்களானால் அந்தப் பேருந்தை பயன்படுத்தி கல்வி பயிலச்செல்லும் சுமார் 50 மாணவ மாணவிகள் வேறு எந்த போக்குவரத்து வசதியும் இன்றி அவதிப்படுவர்.
இன்று மாலை 5.15 மணிக்கு சாத்தான்குளம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய பேருந்து, நிலையத்திற்கு வரவே இல்லை. இன்று பள்ளி நாள் என்பதால் வழக்கமாக அந்த பேருந்தில் பயணிக்கும் மாணவ, மாணவிகள் கஷ்டமடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து கலுங்கு விளை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இசக்கிமுத்து சாத்தான்குளம் பேருந்து பணிமனைக்கு தகவல் தெரிவித்ததோடு, பேருந்து வராவிட்டால் மறியல் செய்யப் போவதாகவும் அறிவித்தார்.
அதையடுத்து விரைந்து வந்த பணிமனை மேலாளர் மற்றும் தொழிற்சங்க செயலாளர் இசக்கிமுத்து மற்றும் மாணவ, மாணவிகளுடன் பேசி, இனி பேருந்து சீராக இயக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தனர்.









