தமிழ்நாடு சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் விடுத்த கோரிக்கை அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மினி உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையம் அருகே உள்ள சின்ன மூலக்கரை கிராமப் பகுதியில் 16 ஏக்கர் அரசு நிலம் இருப்பதாகவும், அங்கு மினி உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்க தலைவர் புதுக்குடி எம் எஸ் ராஜா ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,’ ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஸ்ரீவைகுண்டம் இளைஞர்கள் விளையாட்டில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் . காவல் துறை உள்ளிட்ட உடல் திறன் தேவைப்படும் துறைகளில் பணிபுரிய முயற்சித்து வருகின்றனர். எனவே ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மினி உள் விளையாட்டு அரங்கம் அமைப்பதே சரியானது.
அதுமட்டுமின்றி, நடந்தும் சைக்கிளிலும் பைக்கிலும் வந்து இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளும் நிலையில், விமான நிலையம் அருகே அரங்கம் அமைக்கப்பட தேவையில்லை. யாரும் விமானத்தில் வந்து விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட போவதில்லை.
சிறுவைகுண்டம் ஊர் அருகே விளையாட்டு அரங்கம் அமைக்கப்படா விட்டால் போராட நேரிடும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.









