தூத்துக்குடி மீளவிட்டான் சிப்காட் இன்டஸ்டிரியல் எஸ்டேட் பகுதியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு அருகே தாது மணல் புகழ் வைகுண்டராஜனுக்கு பாத்தியப்பட்ட வி.வி. டைட்டானியம் பிக்மண்ட் நிறுவனத்தில் முறையான முன் அனுமதி, சுற்றுச்சூழல் தாக்க அனுமதியின்றி 6 மெகாவாட் தெர்மல் பவர்பிளான்ட் கடந்த 2016ல் நிறுவப்பட்டு தற்போது மறைமுகமாக இயக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடை செய்வதோடு, சுற்றுச்சூழலுக்கான இழப்பீடு பெறவேண்டும் என்று ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜா தமிழ்நாடு தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் முன்பு வழக்கு தொடுத்துள்ளார்.
இதை விசாரித்த தீர்ப்பாய உறுப்பினர்களாகிய நீதிபதி ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொர்லாப்பட்டி ஆகியோர் மனுவை விசாரணைக்கு அனுமதித்ததுடன், அரசு தரப்பில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவமாற்ற அமைச்சக அதிகாரி, மாசுகட்டுப்பாட்டு அதிகாரி, மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாளர் அடங்கிய கூட்டுக்குழு அமைத்து விசாரணை அறிக்கை தயாரித்து தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.







