குமரி மாவட்டத்தில் கல்லூரி படிப்பை முடித்த இளம்பெண் ஒருவருக்குக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளையும் செய்து உள்ளனர். இந்நிலையில் ஒரு வாலிபர், இளம்பெண் வீடு இருக்கும் பகுதியில் தென்னை கூரையால் ஆன குடோன் அமைத்து அதில் பழக்கடை நடத்தி வருகிறார்.
குடோனுக்கு பழங்களை எடுக்கச் செல்லும் போது அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி போலீசில் புகார் செய்தால் அவருக்கு உடனடியாக தண்டனை கிடைக்காது என்பதால் தானே அவருக்கு தண்டனை வழங்க அந்த பெண் முடிவு செய்தார்.
அதன் படி பழ வியாபாரி பழ குடோனுக்கு வரும் போது அந்த பெண் தனது செல்போனுடன் தயாராக காத்திருந்தார். பழ வியாபாரி வந்ததும் தனது செல்போனில் அவரை வீடியோ எடுத்த படி சரமாரியாக தாக்குகிறார்.
இதை எதிர்பார்க்காத அந்த வாலிபர் அதிர்ச்சியடைந்து பெண்ணின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக பழ குடோனின் ஓலை கூரையை பிய்த்து கொண்டு தப்பி ஓடுகிறார்.
பாதிக்கப்பட்ட பெண் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த பெண் துணிச்சலுடன் தனக்கு நேர்ந்த கொடுமையை தட்டிக் கேட்கும் விதமாகவும், தானே தண்டனை வழங்கும் வகையிலும் எடுத்த 6 நிமிடம் 7 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ குமரி மாவட்டம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
அந்த பெண்ணின் துணிச்சலான செயல், இது போல தவறு செய்ய நினைப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கத் தோன்றும் வகையில் உள்ளது.








