மதுரை மாநகராட்சி 94ஆவது வார்டு தூய்மைப் பணியாளர் மணி முருகேசன் (வயது 41) என்பவரை நேற்று பணியின் போது மூன்று மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதில் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
‘இதுகுறித்து உடன் பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்கள் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், நூற்றுக்கு மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அவனியாபுரம் மாநகராட்சி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோர் மதுரை விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து போராட்டக்காரர்கள் அவனியாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையில் ஈடுபட்டனர். காவல் துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தூய்மைப் பணியாளரை தாக்கிய 3 பேரையும் கைது செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
