கொடுங்கையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் சேகர் என்பவர் மதுபான பார் நடத்தி வருகிறார். நேற்று மாலை அந்த கடைக்கு சீருடையில் வந்த காவலர் ஒருவர் இந்த பகுதியில் வேறு எங்கும் மதுபான பார்கள் நடைப்பெறவில்லை எனவும், உங்களது பார் மட்டுமே இயங்குகிறது என பேச்சை தொடங்கிய பின் பார் உரிமையாளர் அவரிடம் பணத்தை கொடுத்த பிறகு வாரா வாராம் ரோந்து வாகனத்தில் வரும் போலீசாருக்கும் தரவேண்டும் எனவும் காவல் ஆய்வாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கொடுத்து இருந்தாலும், தனக்கும் தரவேண்டும் எனக் கூறுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
மேலும், சீருடையில் இருக்கும் காவலர் அருகே இருந்த மதுபான கடைக்குச் சென்று மதுபானம் கேட்டு, அதனை அங்கு மதுவாங்க வந்த இளைஞரிடம் வாங்க சொல்லி போலீஸ் ரோந்து வாகனத்தில் கொண்டுவந்து கொடுக்கச் சொல்லி அந்த இளைஞர் வாகனத்தில் வைக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது.

ஏற்கனவே மது போதையில் பல்வேறு குற்றச் செயல்களும், கொலைகளும் நடைப்பெற்று வரும் நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுப்படக் கூடிய காவலர் ஒருவர் சட்டவிரோதமாக இயங்கும் பாரை மூட சொல்லாமல் கையூட்டு பெற்றுக்கொண்டு கடையில் இருந்து மதுபானத்தை வாங்கி போலீஸ் வாகனத்தில் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே எழும்பூரில் உளவு பிரிவு காவலர் ஒருவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யும் நபரிடம் லஞ்சம் வாங்கிய நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.















