கோவை, தொண்டாமுத்தூா் அருகேயுள்ள கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் வசிப்பவா் வின்சென்ட் ரவிகுமாா் (57). திரையரங்கில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டதால் பணிக்குச் செல்ல தயாரானாா். முன்னதாக தனது மனைவி நிா்மலாவுடன் வங்கிக்குச் செல்ல முடிவு செய்தாா்.
கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது பைக்கில் வந்த இளைஞா்கள் இருவா் வின்சென்ட் ரவிகுமாரின் வாகனத்தை முந்திச் சென்று மறித்து நிறுத்தினா். வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த இளைஞா், நிா்மலா அணிந்திருந்த 6 பவுன் நகையைப் பறிக்க முயன்றாா். நிா்மலா நகையை விடாமல் போராடியுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த இளைஞா்கள், நிா்மலா, வின்சென்ட் ரவிகுமாா் ஆகியோரைத் தாக்கிவிட்டு நகையைப் பறித்துக் கொண்டு தப்பினா்.
இதில் காயமடைந்த இருவரையும் அவ்வழியே சென்ற பொதுமக்கள் மீட்டு அருகில் இருந்த தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த பேரூா் போலீஸாா், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.














