கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைப்படத் தயாரிப்பாளர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது என்று புகார் அளித்து இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக சுங்கம் பகுதி செயலாளர் காட்டூர் செல்வராஜ் தலைமையில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கணேசன், முத்து இளங்கோவன், சுரேஷ், தீபன் சக்கரவர்த்தி, சூர்ய குமார் உள்ளிட்டோர் கோவை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அந்த மனுவில், அதிமுக ஆட்சியில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட அத்திக்கடவு அவினாசி திட்டம், பில்லூர் குடிநீர் திட்டம், நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் திட்டம், சூயஸ் திட்டம், குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டம் ,ஆத்துப்பாலம் உக்கடம் மேம்பாலம் திட்டம் ,ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் கோவையில் உள்ள ஒன்பது குளங்களை தூர் வாரும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் முறைப்படி மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டங்களை கொச்சைப்படுத்தும் விதமாக ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரகுநாதன் அதிமுக கட்சியை சார்ந்தவர் என்றும் திரைப்பட தயாரிப்பாளர் என்று கூறி மக்களிடையே பலவிதமான பணம் மோசடிகளில் ஏற்படும் வகையில் செயல்பட்டார். மேலும் மாநகராட்சி தேர்தலில் மாநகராட்சி கவுன்சிலராக சீட் கேட்டு அவரது செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தினால் மறுக்கப்பட்டது. இதனால் அவர் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது சுமத்தி வருகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.














