I
அதிமுக தொண்டர்களுக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா செல்போன் வழியாக பேசி, அரசியல் களத்தில் தானும் இருக்கிறேன் என்பதை நினைவுபடுத்தி வருகிறார். இது வரை சுமார் 80க்கும் மேற்பட்ட, அதிமுக தொண்டர்களிடம் சசிகலா, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அடுத்து, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சசிகலாவிற்கு ஆதரவாக,போஸ்டர்கள் ஒட்டினர். இதனால் தென் மாவட்டங்களி்ல் சசிகலா வருகை குறித்து பரபரப்பு இருந்து வந்தது.
இந்த நிலையில் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்தவர்கள், அவருடன் போனில் பேசிய அதிமுக நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகள் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி, அதிமுக கட்சி தலைமை அதிரடி நடவடிக்கையை எடுத்தது. இருந்தாலும் சசிகலாவிற்கான ஆதரவு நிலை ஆங்காங்கே வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதி, காந்தி சிலை ரவுண்டானா, பஞ்சு மார்க்கெட், சங்கரன்கோவில் சாலை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் பெயரில் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
போஸ்டரில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா படங்களுடன், ‘அழிந்து வரும் அதிமுகவை காப்பாற்ற, புரட்சி தலைவி அம்மாவின் வழியில், எங்கள் தியாகத் தலைவியே வாருங்கள், அதிமுகவை காப்பாற்ற. இவண் – அஇஅதிமுக உண்மை தொண்டர்கள், விருதுநகர் மாவட்டம்’ என்று அச்சிடப்பட்டிருந்தது.














