பஞ்சாபில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு ரூ.400க்கு கொள்முதல் செய்த கோவாக்சின் தடுப்பூசியை தனியார் மருத்துவமனைக்கு லாபத்துக்கு விற்பதாக கடந்த சில நாட்களாக புகார் புகைந்தது.
மொகாலியில் நிருபர்களை சந்தித்த சிரோன்மணி அகாலிதளம் கட்சி தலைவர் சுக்பிர் பாதல், ’கோவாக்சின் தடுப்பூசியை ஒரு டோஸ் ரூ.400 என கொள்முதல் செய்து, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,060க்கு விற்பனை செய்கிறது. இதன் மூலம் மாநில அரசுக்கு ரூ.660 லாபம் கிடைக்கிறது. இவ்வாறு மாநில அரசு, ஒரு நாளைக்கு 35 ஆயிரம் டோஸ் தடுப்பூசியை விற்பனை செய்து ரூ.2 கோடி வருமானம் பார்த்துள்ளது.
தனியார் மருத்துவமனைகள், ஒரு டோஸ் தடுப்பூசி போட ரூ.1,560 வசூல் செய்கின்றன. இதனால், ஒரு குடும்பத்தினர் ஒரு டோஸ் தடுப்பூசி போட ரூ.6 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் செலவாகிறது. காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கை முறையற்றது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில சுகாதார அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்து, உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும்’ என்றார்.
இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிஎஸ் சித்து கூறுகையில், ’தடுப்பூசி குறித்த கட்டுப்பாடு என்னிடம் இல்லை. சிகிச்சை, ஆய்வு , கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் ஆகியவற்றை மட்டுமே நான் கவனித்து வருகிறேன். தடுப்பூசி விற்பனை குறித்து விசாரணை நடத்தப்படும்’ என்றார்.















