திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் காணாமல் போன ரூ.19 லட்சம் மதிப்புள்ள 164 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும், ரூ. 6 லட்சத்தி 7ஆயிரத்து 800 மதிப்புள்ள 50 செல்போன்களை ஐ.எம்.இ.ஐ எண் மூலம் கண்டு பிடித்து பறிமுதல் செய்துள்ளனர். செல்போன்களை அந்தந்த காவல் நிலைய காவலர்களிடம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஒப்படைத்தார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், ‘ ஊரடங்கு விதிமுறைகள் அமலில் இருப்பதால், காவல்நிலைய காவலர்கள் மூலம் செல்போன்கள் நேரடியாக வீட்டிற்கே சென்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்’ என தெரிவித்தார்.
‘ வங்கி விபரங்கள் போன்ற உங்களுடைய தனிப்பட்ட விபரங்களையும், புகைப்படங்களையும் செல்போனில் வைக்காதீர்கள். கவனமில்லாமல் உங்கள் செல்போனை தொலைத்து , அது ஒரு வேளை சமூக விரோதிகள் கையில் கிடைத்துவிட்டால் அதை அவர்கள் பல்வேறு சட்ட விரோதமான காரியங்களுக்கு பயன்படுத்தக்கூடும்’ என்று ஆலோசனை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் சீமைசாமி, ஆய்வாளர் ராஜதுரை, தனிப்பிரிவு ஆய்வாளர் ராஜேஷ், உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர்.







