நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்2 விண்கலம் செப்டம்பர் 7ஆம் தேதி நிலவில் தரை இறங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
இது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூன் 22ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்றுவட்டப்பாதையில் வந்து கொண்டிருந்த விண்கலம் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்டு 6ஆம்தேதி வரை 5 முறை படிப்படியாக நிலை உயர்த்தப்பட்டது. விண்கலம் தொடர்ந்து புவி சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த நிலையில், இறுதிகட்ட நிலை உயர்வையும் நிலவை நோக்கிய நகர்வையும் நோக்கி விஞ்ஞானிகள் கடந்த புதன்கிழமை இயக்கினர்.
தொடர்ந்து வெற்றிகரமாக நிலவை நோக்கி பயணிக்கும் விண்கலம் நாளை மறுநாள் 20ஆம் தேதி நிலவை சென்றடையும்.

அப்போது விண்கலத்தில் உள்ள திரவ என்ஜின் பற்ற வைக்கப்பட்டு நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைக்கப்படும். அதன் மூலம் நிலவின் பரப்பில் இருந்து குறைந்த பட்சம் 118 கிலோ மீட்டர் தொலைவையும், அதிகபட்சம் 18,078 கிலோ மீட்டர் தொலைவையும் கொண்ட நீள் வட்டப் பாதையில் சுற்றும். செப்டம்பர் 1ஆம் தேதி வரை படிப்படியாக 4 முறை சுற்று வட்டப்பாதை அளவு குறைக்கப்பட்டு இறுதியாக நிலவின் பரப்பில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலான சுற்றுப்பாதையில் சுற்றி வரும் வகையில் விண்கலம் நிறுத்தப்படும்.
செப்டம்பர் 2ஆம் தேதி விண்கலத்தின் ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் பிரிக்கப்படும். அவ்வாறு பிரிக்கப்படும் லேண்டர் அமைப்பு தொடர்ந்து 4 நாட்கள் நிலவை சுற்றிவரும். அப்போது 2 முறை அதன் சுற்று வட்டப்பாதை அளவு குறைக்கப்பட்டு இறுதியாக செப்டம்பர் 7ஆம்தேதி நிலவின் தென்துருவத்தில் தரை இறக்கப்படும்.













