நெல்லை மாவட்டத்தில் கொரோனா 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் . நாள் ஒன்றுக்கு 600 முதல் 800 பேர் வரை பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் .
இந்த இரண்டாவது அலையில் பெரும்பாலானவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது. நெல்லை அரசு மருத்துவமனையைப் பொறுத்தவரை 800 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளது. அந்த படுக்கைகள் அனைத்தும் நிரம்பி , கூடுதல் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு தொற்று பாதித்தவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் .
நேற்று முதல் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு குறைந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஆக்சிஜன் கேட்டு கோரிக்கை அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து லாரி மூலம் பலத்த பாதுகாப்புடன் 8 கிலோ லிட்டர் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு மருத்துவமனை சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டது.
இதற்கு முன்பு மகேந்திரகிரியிலிருந்து நேற்று முன்தினம் 8 கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது.








