தமிழ்நாட்டில் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியிலாவது குறைந்த பட்சம் அடிப்படை வசதி இருக்கும் என்பது சாமன்யர்களின் நம்பிக்கை. அதை பொய்ப்பிப்பதுபோல் நெல்லை கலெக்டர் வீட்டருகே உள்ள அண்ணாநகர் சாலைகள் அனைத்தும் ஓட்டை உடைசல்கள், பள்ள பாதாளங்களாக இருக்கின்றன.
குறிப்பாக அவரது வீட்டருகே செல்லும் தார்ச்சாலை முழுக்க சிதைந்து ஓரத்தில் மண்டிய செம்மண் சரிந்து சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. சிறு மழைக்கே குழைந்துவிடும் அச்சாலையில் பயணிக்கும் மனிதர்களும் வாகனங்களும் விழாமல் வீடு போய் சேருவது நடவாது.
நேற்று பெய்த மழையில் சாலை முழுக்க செம்மண் சேறு படிந்திருந்தது. அதில் நடந்துசென்ற அப்பகுதி மூதாட்டி சந்திரா (65) வழுக்கிவிழுந்தார். இதில் அவரது இடதுகை முறிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சை வரவழைத்து அவரை அருகில் இருந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ‘
அண்ணாநகர் முழுக்க சாலை வசதி மிக மோசம். மழைக்காலத்தில் மட்டுமல்ல, மற்ற நாட்களிலும் குண்டு, குழிகளில் சிக்கி இரு சக்கர வாகனங்களே திணறும். அருகில் மருத்துவமனை இருப்பது வசதியாக போய்விட்டது’ என்றார் அப்பகுதி இளைஞர். கலெக்டர் வீடு மட்டுமல்ல, எஸ்பி உறைவிடமும் அருகில்தான் இருக்கிறது.









