திருவட்டார் அருகே செங்கோடி மார்த்தார் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் விஜுவ் (வயது 27). ஜே.சி.பி. டிரைவராக உள்ளார். இவர், கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். ஓணம் பண்டிகையையொட்டி நேற்று விஜுவ், தனது நண்பர்கள் வினோத், விபினுடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்தார். மோட்டார் சைக்கிளை விபின் ஓட்டினார்.
கடையாலு மூடு அருகே அரக்கநாடு பகுதியில் உள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் வந்தபோது 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தனர். விஜுவ்வுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி விஜுவ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடையாலு மூடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.