கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே பூங்குளத்து விளை பகுதியை சேர்ந்தவர் ஆர்.எல்.ராஜா. அகஸ்தீஸ்வரம் ஒன்றிய முன்னாள் தி.மு.க. நிர்வாகியான ஆர்.எல்.ராஜா தற்போது உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக அவர் வேலூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். இதனால் பூங்குளத்தவிளையில் உள்ள வீடு பூட்டியே கிடந்தது.
இந்த நிலையில் ராஜா வீட்டின் கதவுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அக்கம் பக்கத்தினர் இதனை கண்டு ராஜாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அவர் கன்னியாகுமரி வந்தார். வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோக்கள் உடைந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த 22 பவுன் நகை, மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.
மேலும் வீட்டில் இருந்த வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் ஆகியவையும் மாயமாகி இருந்தது. இது பற்றி கன்னியாகுமரி போலீசில் ராஜா புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாயும், கைரேகை நிபுணர்களும் சென்று ஆய்வு செய்தனர். ராஜா வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.








