முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. சுற்றுவட்டப்பாதையில் சரியாக சேர்ந்த சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர் விண்கலம், இன்று அதிகாலை நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. நிலவை நோக்கி பயணித்தது லேண்டர். தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது அதிலிருந்து சிக்னல் கிடைக்காமல் போனது. விக்ரம் லேண்டரி லிருந்து எதிர்பார்த்தபடி சிக்னல் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தழுதழுத்த குரலில் அறிவித்தார்.
இதையடுத்து பிரதமர் மோடி, கடைசிவரை போராடிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்ததோடு கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமானது அல்ல என்று சிவனின் தோள்களை தட்டிக்கொடுத்தார். நிலவைத் தொடும் இந்தியாவின் முயற்சி நிச்சயமாக வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
சந்திரயான் – 2 திட்டத்தில் ஏற்பட்டது தோல்விக்கு சமமான ஒன்றல்ல. ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான முன்னேற்றத்தில் விலைமதிப்பற்றக் கற்றலுக்கான தருணம் தான் இது. நாம் விரைவில் நிலவில் இருப்போம். இஸ்ரோவிற்க்கு நன்றி. இந்த நாடு உங்களை நம்புகிறது பாராட்டுகிறது என பதிவிட்டுள்ளார்.














