குமரி மாவட்டம் நித்திரவிளை சந்திப்பில் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சின்னத்துறையை சேர்ந்த வாலிபர் கிசான்ஜாண் (வயது 27) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர், ஹெல்மெட் அணியாமலும், மது போதையிலும் இருந்தார். அதோடு அவரது மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட்டும் விதிமுறைப்படி எழுதப்படவில்லை. இதையடுத்து வாலிபர் கிசான்ஜாண் மீது நித்திரவிளை போலீசார் புதிய வாகன சட்டப்படி வழக்குப்பதிவு செய்தனர். இது குமரி மாவட்டத்தில் பதிவான முதல் வழக்கு ஆகும்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் குழித்துறை குற்றவியல் 2-வது கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி ஜெய்சங்கர் விசாரித்தார்.
அவர், மோட்டார் வாகன புதிய சட்டத்திருத்த விதிப்படி ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1000-மும், போதையில் வாகனம் ஓட்டியதற்கு ரூ.10 ஆயிரமும், விதிமுறைப்படி நம்பர் பிளேட் வைக்காததற்கு ரூ.500-மும் என மொத்தம் ரூ.11,500 அபராதம் விதித்தார்.









