ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க, முன்ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் கடந்த 21ஆம் தேதி அவரைக் கைது செய்தனர்.
இந்நிலையில், சிபிஐ காவலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரத்தின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது பசிதம்பரம் தரப்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார்.
அப்போது, சிபிஐ விசாரணைக்கு ஆஜராக நள்ளிரவில் எப்படி நோட்டீஸ் ஒட்ட முடியும்? விசாரணை தொடர்பாக சிபிஐ நோட்டீசுக்கு பதில் அளித்தும் ஜாமீனில் வெளிவர முடியாத உத்தரவை பிறப்பித்தனர். எங்கள் மனுவை பலனற்று போக செய்ய சிபிஐ திட்டமிடுகிறது.
அமலாக்கத்துறை முன்ஜாமீன் மனு மீது வெள்ளிக்கிழமை தீர்ப்பு வரவுள்ளது. எனவே இந்த 3 நாட்களுக்கு சலுகை தர வேண்டும். இடைக்கால ஜாமீன் தர வேண்டும் அல்லது வீட்டுக் காவலில் வைக்க வேண்டும்.
ப.சிதம்பரத்துக்கு 74 வயதானதால் சிபிஐ வழக்கில் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிடாதபடி தடை விதிக்க வேண்டும். எனவே அவரை திகார் சிறையில் மட்டும் அடைக்க வேண்டாம் என்று கபில் சிபல் வாதிட்டார்.
இந்நிலையில், ‘இந்த கோரிக்கையை நீங்கள் ஏன் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வைக்கக்கூடாது?’ என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் ஜாமீன் மனுதாக்கல் செய்ய அனுமதி வழங்கியது. சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் கொடுக்காவிட்டால் சிதம்பரத்தை 3 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியது.
இதையடுத்து ப.சிதம்பரத்தின் காவல் நிறைவடைவதால் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு மேலும் ஒரு நாள் சிபிஐ காவலுக்கும் அனுமதி வழங்கி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.













