தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் செல்வி ஆகியோரின் மகன் கவின் (24). இவர் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் படித்த இளம்பெண் ஒருவர் பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள சித்த மருத்துவ மையத்தில் வேலை பார்த்து வந்தார். அவரும் கவினும் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அந்த இளம் பெண்ணின் தந்தை சண்முகராஜன் தாய் கிருஷ்ண குமாரி ஆகியோர் மணிமுத்தாறு ஒன்று பட்டாலியன் சப் இன்ஸ்பெக்டர்களாக உள்ளனர். சாதி உள்ளிட்ட காரணங்களுக்காக இளம் பெண் கவினுடன் பழகியது அவரது குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை.
ஆனாலும் தனது பள்ளி தோழியுடன் கொண்ட அன்பின் காரணமாக, கவின், தனது குடும்பத்தில் யாருக்கு சுகவீனம் என்றாலும் இந்த மருத்துவ மையத்திற்கு வந்தே மருத்துவம் பார்த்து வந்தார். இன்று பகலில் கவின் தனது பள்ளித் தோழியைப் பார்க்க வந்துள்ளார். அப்போது இளம் பெண்ணின் சகோதரரான சுர்ஜித் என்பவர் அவரை பேச வேண்டும் என்று கே டி சி நகர் பகுதியில் உள்ள அஷ்டலட்சுமி நகர் 1வது தெருவிற்கு அழைத்துச் சென்றார். சென்று, அவரை ஓட ஓட விரட்டி, அப்பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை முன்பு முதுகு, முகம், தலை உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.
பின்னர் அவரே பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்து விட்டார். போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.









