தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் கடற்கரைபகுதியில் பனை மரங்கள் செழித்து வளர்ந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தினம் தோறும் அந்த பகுதியில் உள்ள பனை மரங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் பனை மரங்கள் தீயில் கருகுகிறது.

‘ தென்னையை வைத்தவன் தின்றுவிட்டு செத்தான், பனையை வைத்தவன் பார்த்து விட்டு செத்தான்’ என்பது பழமொழி. அனைத்து உறுப்புகளாலும் மனிதர்களுக்கு உதவும் பனை மரங்கள், நுங்கு பதநீர் போன்ற பயன் தருவதற்கு பல்லாண்டுகள் ஆகின்றன. அதனால்தான் பனை நடுவது அடுத்த தலைமுறைக்கான ஆயத்த நடவடிக்கையாக இருக்கிறது.
இவ்வாறு, நீண்ட காலம் வளர்வதற்கு பிடிக்கும் ஒரு மரத்தை உடனடியாக தீவைத்து எரிப்பவர்கள் மனநிலை சிதைவுற்றவர்களாகவே இருப்பர். மேலும், திருட்டுத்தனமாக போதை ஏற்றுவதற்கு செல்லும் கும்பல்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.









