தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அப்பகுதி மக்களால் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட பழமையான குளம் ஒன்றை தூர்வார வேண்டுமென அப்பகுதி மக்கள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் அரசு அதனை தூர் வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் அந்தக் குளத்தின் தூர் வாரும் பணிகள் நகராட்சி சார்பில் தற்போது நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக குளத்திலிருந்து எடுக்கப்பட்ட கழிவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் எடுத்து அந்த குளத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் குப்பை கழிவுகள் மற்றும் சாக்கடைகளை மலை போல குவித்து வைத்துள்ளனர்.
இந்த கழிவுகளானது சுமார் ஒரு வாரம் அங்கேயே குவித்து வைக்கப்பட்டு பின்னர் ஈரம் காய்ந்த பின்னர் அந்த இடத்தில் செயல்படும் தற்காலிக கழிவுகள் பிரித்து எடுக்கும் இயந்திரத்தின் மூலம் பிளாஸ்டிக் மற்றும் மட்கும் கழிவுகள் என தரம் பிரிக்கப்பட்டு பின்னர் பிளாஸ்டிக் கழிவுகளை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
இந்த பணியின் போது அந்த தெரு முழுவதும் சாக்கடை கழிவுகள் மலை போல குவித்து வைத்திருப்பதால் அங்கு துர்நாற்றம் வீசி வரும் நிலையில் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.











