நெல்லை மாவட்டம் திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சி 18 உறுப்பினர்களைக் கொண்டதாகும். இங்கு தலைவர் தேர்தலில் திமுக சார்பில் கமலாநேருவும், அதிமுக சார்பில் ஜான்சிராணியும் போட்டியிட்ட நிலையில் இருவருக்கும் 9 உறுப்பினர்கள் ஆதரவு என சமநிலையில் இருந்ததால் திருஉளச்சீட்டு முறைப்படி அதிமுக வேற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பேரூராட்சி தலைவராக ஜான்சிராணி இருந்து வந்த நிலையில் அதிமுக, தேமுதிமுக உறுப்பினர்கள் திமுகவில் இணைந்து, திமுக 9 காங்கிரஸ் 2, சுயேட்சை 1 என திமுக சார்பு உறுப்பினர்கள் பலம் 12 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் அந்த உறுப்பினர்கள் 12 பேரும் நெல்லையில் உள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்து, உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸை சந்தித்து அதிமுக தலைவர் ஜான்சிராணி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்துள்ளனர். ஒருவார காலத்திற்குள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது பேரூராட்சி தலைவராக உள்ள ஜான்சி ராணி, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் .








