விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டது சதுர்த்தி விழாவை முன்னிட்டு அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குரும்பூர், நாசரேத், வாழவல்லான் ஆகிய இடங்களில் 50க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் திருச்செந்தூர் கடற்கரையில் கரைப்பதற்காக காயல்பட்டினம் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

காயல்பட்டினத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் அதிரடி படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
அதேவேளையில் விநாயகர் ஊர்வலத்தை பார்ப்பதற்காக ஆண், பெண் அடங்கலாக ஏராளமான இஸ்லாமியர்களும் நகருக்குள் அங்காங்கே நின்றிருந்தனர்.

விநாயகர் சிலையுடன் வந்தவர்களுக்கு காயல்பட்டினம் முஸ்லீம்கள் அமைப்பான காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பாக அதன் தலைவர் ஜெய்னுல் ஆப்தீன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகரச் செயலாளர் யாசீன், காயல்பட்டினம் மாணவர் நிறுவன இயக்குனர் ஆசிரியர் மீரா சாகிபு ஆகியோர் இணைந்து குளிர்பானம் வழங்கினர்.
ஊர்வலத்தை இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டின் வாசலில் நின்று கண்டு ரசித்தனர். மதங்கள் வேறு ஆயினும், இனத்தால் அனைவரும்
ஒற்றுமையுடன் இருப்பதற்காக சாட்சியாக அமைந்தஇந்த நிகழ்வு உணர்வின் நெகிழ்ச்சியை உருவாக்கியது..










