திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை செல்வமருதூரைச் சேர்ந்த தங்கத்துரை மகன் ராஜேந்திரன் (22)அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு செல்வதாக கூறி சென்ற ராஜேந்திரன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது தாய் சுமதி (50) திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் ஏதும் துப்பு துலங்காத நிலையில், மூன்று மாதங்கள் கழித்து நேற்று தேரிக்காட்டில் ராஜேந்திரனின் உடல் எலும்புக்கூடாக மீட்கப்பட்டது.

திசையன்விளை செல்வமருதூரைச் சேர்ந்த குமரேசன் மகன் காட்வின் (16),மகேஷ் மகன் நிவேஸ் (14) , முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் ஆதித்தன் (16), ஆகியோர் ராஜேந்திரனை கொன்று புதைத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மூவரையும் தேரிக்காட்டுக்கு அழைத்து வந்த போலீசார், சம்பவ இடத்தை கண்டுபிடித்து, சடலத்தை தோண்டியெடுத்து அங்கேயே அரசு மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்தனர்.

கொலையுண்ட ராஜேந்திரனும், ஆதித்தனும் ஒரே பெண்ணை காதலித்ததில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து போதை ஆசை காட்டி தட்டார்மடம் அருகே உள்ள எம்எல் தேரி பகுதிக்கு அழைத்து வந்து நண்பர்களுடன் சேர்ந்து ராஜேந்திரனை அடித்துக் கொன்றுள்ளார்.
மகன் மாயமானது குறித்து புகார் கொடுத்தபோது, அரவாணியுடன் சென்றிருப்பதாக கூறி போலீஸார் விசாரணை நடத்தாமல் தட்டிக் கழித்ததாக ராஜேந்திரனின் தாயார் புகார் தெரிவித்தார்.