தூத்துக்குடி காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது ஜெமீலுக்கு திருச்செந்தூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 4 ஏக்கர் 9 செண்டு நிலம் இருந்தது. அவர் 1987ல் இறந்த பின்பு அந்த நிலத்தை அவரது மகன் முகமது நூகு தம்பி மற்றும் அவருடன் பிறந்தோர் அனுபவித்து வந்தனர்.
இந்நிலையில், உடன்குடி, கிறிஸ்டியாநகரம் கோலாப் தெருவை சேர்ந்த ஜெயசிங் மகன் செல்வகுமார் (38), இறந்துபோன முகமது ஜெமீல் போன்று வேறு ஒருவரை வைத்து ஆள்மாறாட்டம் செய்து அந்த நிலத்தை மோசடியாக தனக்கு பவர் பத்திரப்பதிவு செய்துகொண்டார். அந்த பத்திர ஆவணத்தில் மந்திரமூர்த்தி , ஸ்ரீமுருகன் ஆகியோர் சாட்சியாக கையொப்பமிட்டுள்ளனர்.
பின்னர், நிலத்தை ஐகோர்ட்துரை என்பவருக்கு கிரைய ஒப்பந்தம் செய்த செல்வகுமார், பின்னர் அதை ரத்து செய்துவிட்டு திருச்செந்தூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு 2021ம் ஆண்டு கிரையம் செய்து கொடுத்துள்ளார்.
இதுகுறித்து நில வாரிசு உரிமையாளர் முகமது நூகு தம்பி, கடந்த 27.04.2022 அன்று தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவினர் , செல்வகுமாரை உடன்குடியில் கைது செய்தனர்.