ஒரு காலத்தில் அத்தி, அரசு, ஆல், வேம்பு, கடம்பு, மருது, வாகை என்று வகைவகையாக மரங்கள் வளர்ந்து அடர்ந்து கிடந்த வனம் வேணுவனம், அதாவது இப்போதைய நெல்லை. அதுமட்டுமா, நான்குபுறமும் பச்சைப் பசிய நெல் வயல்கள் நிறைந்த நெல்லையின் அழகைக் காண கண்கள் கோடி வேண்டும்.
ஆனால், வயல்களை எல்லாம் அழித்து, வணிக நிறுவனங்களை வளர்த்து விட்டார்கள். சாலை அமைப்பது என்ற பெயரில் பெரிய, பெரிய மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தி விட்டார்கள். இதற்கு முன்பு தமிரபரணி கரையோர சாலைகளில் இத்தகைய மரங்களை வீழ்த்திய போது பொதுமக்கள் எதிர்த்த நிகழ்ச்சிகள் உண்டு.
அதுபோல், இன்று நெல்லை – சேரன்மகாதேவி எஸ் எச் 40 நெடுஞ்சாலையில் காட்சி மண்டபம் அருகே, நூறாண்டு முதிர்ந்த அத்திமரத்தை நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் வீழ்த்த முயன்றனர். அதை நெல்லை மாவட்ட மக்கள் நல குழு பொறுப்பாளர் கணேஷ், அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்க பொறுப்பாளர் கந்த முருகன் ஆகியோர் தடுத்தனர். ஆனாலும் ‘மாவட்ட நிர்வாகம், வனத்துறை உள்ளிட்டவற்றிடம் அனுமதி வாங்கிய வெட்டப்படுகிறது. தடுப்பது சட்ட விரோதம்’ என்று நெடுஞ்சாலை அதிகாரிகள் அவர்களை மிரட்டியுள்ளனர்.
மேலும் சில வயது முதிர்ந்த, செழித்து வளர்ந்த மரங்களை வெட்டுவதற்கான முயற்சி நடக்கிறது.இதை தடுக்க வேண்டும். சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட வேண்டும்’ என்று அவர்கள் ஆதங்கப் பட்டனர்.









