விளாத்திகுளம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த தாண்டவம்(50). இவர் குளத்தூர் மற்றும் தருவைகுளம் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளராகவும் இருந்து வந்தார். இவர் 2019ஆம் ஆண்டில் மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது அங்கு சொத்து பிரச்சினை தொடர்பாக கோமதி (42) என்பவர் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்திய ஆனந்த தாண்டவம் கோமதியுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார் . பின்னர் இருவரும் இணைந்து வாழ்ந்துள்ளனர். அப்போது காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவம், கோமதியிடம் ரூ.6 லட்சம் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான கோமதி இரண்டு முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும், காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் மீது கடந்த ஏப்ரல் மாதம் டிஜிபி அலுவலகத்தில் புகார் செய்தார்.
இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டதில் காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவத்தை இடைநீக்கம் செய்து தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க் உத்தரவிட்டார்.