மதுரை மாவட்டம் சோழவந்தான் சித்திரை திருவிழாவில் வரும் 16ஆம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் வேடம் பூண்டு ஜெனகை நாராயணபெருமாள் இறங்கும் வைபவம் நடைபெறவுள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழாவை அடுத்து நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவான இந்நிகழ்வில், சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் ஒன்றுகூடுவர்.
தற்போது, வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடம் மிகவும் அசுத்தமாக உள்ளது. வைகை ஆற்றில் சாக்கடை கழிவுநீர் கலந்தும் குப்பைகள் கொட்டப்பட்டும் வருகிறது.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஏற்கெனவே, கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சித்திரை திருவிழா இந்த ஆண்டு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் பக்தர்களுக்கு தொற்று நோய் பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கடமை என பொதுமக்கள் கூறுகின்றனர்.











