மதுரை மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் சந்திரன். பாலிமர் தொலைக்காட்சியில் உயர்நீதிமன்ற கிளை செய்தியாளராக பணியாற்றி வருகிறார். மகாத்மா காந்தி நகர் குடியிருப்புப் பகுதியில் சமூக விரோதிகள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சந்திரன் போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா வியாபாரிகள் கடந்த 2017ஆம் ஆண்டு அவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடத்தி வந்ததால் அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா விற்பனை கும்பல் இதற்கு சந்திரன் தான் காரணம் என கூறி சந்திரனை கத்தியால் சரமாரி குத்தினர். இதில் படுகாயம் அடைந்த சந்திரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் . இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.
இருதரப்பு வாதங்கள் நடந்து முடிந்த நிலையில் நீதிபதிஜெயக்குமாரி ஜெமி ரத்தினா, இன்று தீர்ப்பளித்தார். அதில் நான்கு பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும் தலா ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.














