நாகர்கோவில், வடக்கு கோணம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா விழாவில் வசந்த குமார் எம்.பி. கலந்து கொண்டு பங்கு மக்களுக்கு திருவிழா வாழ்த்து தெரிவித்தார்.
கோட்டார் மறை மாவட்ட செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் போது, பங்குத ந்தை ரவி காட்சன் கென்னடி தலைமையில் பங்கு மக்கள் எம்.பி.யிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் குமரி மாவட்டத்தில் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணி திருத்தலத்துக்கு புனித பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்ல ரெயில் வசதி இல்லாததால் அவர்கள் பஸ்களில் பயணம் செய்கிறார்கள்.
இது அவர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கிறது. எனவே, தென்மாவட்ட மக்களின் நலன் கருதி கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டணம் வழியாக வேளாங்கண்ணிக்கு தினமும் மாலையில் ரெயில் இயக்க வேண்டும்.
இது போல், வரும் மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து தினமும் மாலையில் ரெயில் இயக்க வேண்டும். இதன் மூலம் வேளாங்கண்ணிக்கு செல்பவர்கள் மட்டுமின்றி நாகூர் தர்க்கா செல்பவர்களும் பயனடைவார்கள் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.








