முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வாகியுள்ளார்.
கடந்த 1991ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அசாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் கடந்த ஜூன் 14ம் தேதியுடன் நிறைவடைந்தது.
மீண்டும் அசாமிலிருந்து தேர்ந்தெடுக்க அம்மாநிலத்தில் காங்கிரசுக்கு போதிய எம்எல்ஏக்கள் பலம் இல்லாததாலும், அங்கு எம்பி பதவி காலியாகாததாலும் மீண்டும் மன்மோகன் சிங்கை மாநிலங்களவைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே, ராஜஸ்தானை சேர்ந்த பாஜ மாநிலங்களவை உறுப்பினர் மதன் லால் சைனி கடந்த ஜூனில் உயிரிழந்தார். இதனால், ஒரு எம்பி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த எம்பி பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட மன்மோகன் சிங் கடந்த 13ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மனு நேற்று பரிசீலனை செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில் அக்கட்சிக்கு 100 எம்எல்ஏக்கள் உள்ளதால் போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வானார்.













