தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 2020 ஜனவரி 2ல் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமலும் இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமலும் தேர்தல் நடத்த கூடாது என்று திமுக சார்பில் ஏற்கனவே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 28ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் திமுகவின் வழக்கு மீது டிசம்பர் 5ம் தேதி விசாரணை செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தேர்தல் தேதிகள் குறித்தும், ஊரக பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்தது குறித்தும் திமுக கூடுதல் மனுக்களை தாக்கல் செய்யவும் வாய்ப்புள்ளது.












