நாங்குநேரி அருகே உள்ள மறுகால் குறிச்சியை சேர்ந்தவர் அருணாசலம் மற்றும் சுப்பையா. இன்று காலை 11 மணியளவில் சுமார் 12 பேர் கொண்ட கும்பல் ஒன்று வெடிகுண்டு, அரிவாள், கத்தியுடன் இவர்கள் வீடுகளுக்கு வந்தது.
நேராக சுப்பையா வீட்டு மீது ஒரு வெடிகுண்டை வீசினர். வெளியே வந்த சுப்பையாவின் மனைவி சாந்தியை வெட்டிக்கொன்றனர்.
அடுத்து அந்த கும்பல் அருணாசலம் வீடு சென்று வெடிகுண்டு வீசியது. அருணாசலமும் அவரது மனைவி சண்முகத்தாயும் (50) வெளியில் ஓடினர். அருணாசலம் வேகமாக ஓடிவிட்டார். சண்முகத்தாய் அருகில் உள்ள வீட்டின் குளியலறைக்குள் நுழைந்தார். அவரைஅங்கிருந்து வெளியே இழுத்துவந்த கும்பல் அரிவாளால் தலையை துண்டித்து எடுத்து வீசிவிட்டு ஓடிவிட்டது.
கடந்த மார்ச்சில் நாங்குநேரி உச்சினிமாகாளி கோயில் அருகே ஓட்டலில் இருவர் வெட்டிக்கொல்லப்பட்டனர். அதற்கு பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எஸ்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.








