தமிழ்நாட்டில் போலீஸ், தீயணைப்பு துறை, மற்றும் சிறை துறை காவலர்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. 8 ஆயிரத்து 888 காலி பணியிடங்களில் 250 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. கல்வி தகுதி 10-ம் வகுப்பு என்ற போதிலும் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என லட்கக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்களில் 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் தேர்வு எழுத தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு இன்று எழுத்து தேர்வு நடந்தது. இதற்காக 32 மாவட்ட தலைநகரங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சீருடைப் பணியாளர்கள் தேர்வாணைய கூடுதல் டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் மேற்பார்வையில் 228 கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழகம் முழுவதும் எஸ்பி மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றது. டி.ஐ.ஜி.க்கள் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக உடல் தகுதி தேர்வு நடைபெறும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. கயிறு ஏறுதல், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படும்.
மார்பு அளவு, உயரம் ஆகியற்றையும் கணக்கிட்டு உடல் தகுதி தேர்வில் ஆட்களை தேர்வு செய்வார்கள். இந்த இரண்டிலும் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்படும்.
வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் 2 மாதத்தில் போலீஸ் இணைய தளத்தில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.