தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்கின்றன. மேலும் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஆலோசனையும் வழங்குகின்றன. இந்த நிறுவனங்களின் முதலீட்டை அதிகம் ஈர்க்கும் ஒரு நிறுவனம் அல்லது துறை எதிர்காலத்தில் அமோக வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது. தனியார் பங்கு முதலீட்டின் ஒரு பிரிவாக துணிகர முதலீடு இருக்கிறது.
துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டை ஈர்க்கும் நிறுவனங்கள் ஓரளவு வளர்ச்சி கண்ட பின் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகின்றன. அப்போது அந்த நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருக்கும் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் தமது பங்குகளை விற்று விட்டு கணிசமான லாபத்துடன் முழுமையாகவோ, பகுதி அளவோ வெளியேறுகின்றன.
ஆகஸ்டு மாதத்துடன் நிறைவடைந்த 8 மாதங்களில் 36,700 கோடி டாலருக்கு துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீடு ஈர்க்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது 36,500 கோடி டாலராக இருந்தது. ஆக, முதலீடு 0.55 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 440 கோடி டாலர் அளவிற்கு இந்த முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் புதிய பங்கு வெளியீடுகள் குறைந்து இருக்கிறது. எனவே துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டாளர்கள் பல நிறுவனங்களில் இருந்து வெளியேற முடியாத நிலை உள்ளதாக தெரிகிறது. பங்கு வெளியீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில் மேற்கண்ட முதலீட்டாளர்கள் அதிக அளவில் தமது முதலீடுகளை திரும்பப் பெறுவார்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.













