இந்திய வங்கிகளின் கடன் மற்றும் டெபாசிட் வளர்ச்சி குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விவரம்:
ஆகஸ்டு 30 நிலவரப்படி வங்கிகள் ஏறக்குறைய ரூ.96.80 லட்சம் கோடி கடன் வழங்கி உள்ளன. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.87.80 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, வங்கிகள் வழங்கிய கடன் 10.24 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஆகஸ்டு 16 வரையிலான முந்தைய இரண்டு வாரங்களில் வங்கிகள் வழங்கிய கடன் 11.64 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.96.82 லட்சம் கோடியாக இருந்தது.
இக் காலத்தில் வங்கிகள் திரட்டிய டெபாசிட் 9.73 சதவீதம் உயர்ந்து ரூ.127.80 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் ரூ.116.46 லட்சம் கோடியாக இருந்தது. முந்தைய இரண்டு வாரங்களில் அது 10.15 சதவீதம் உயர்ந்து ரூ.126.80 லட்சம் கோடியாக இருந்தது.
ஜூலை மாதத்தில் வங்கிகள் வழங்கிய உணவு அல்லாக் கடன் 11.4 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. விவசாய கடன் 6.8 சதவீதமும், சேவைத் துறைக்கான கடன் 15.2 சதவீதமும் உயர்ந்து இருக்கிறது. தனிநபர் கடன் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் விவசாய கடன் 10.6 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. சேவைத் துறை கடன் 23 சதவீதம் உயர்ந்து இருந்தது. தனிநபர் கடன் 16.7 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது.
இவ்வாறு ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.













