தக்கலையை அடுத்த திக்கணங்கோடு தெங்கன்குழி பகுதியை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 57). கட்டிட தொழிலாளி.
ராயப்பனின் மகளுக்கு திருமணம் முடிந்து ராஜாக்கமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார். ஓணம் பண்டிகையையொட்டி நேற்று ராயப்பன், ராஜாக்கமங்கலத்தில் வசிக்கும் மகளை பார்க்க சென்றார்.
மாலைவரை அங்கு தங்கியிருந்த ராயப்பன், பின்னர் வீட்டிற்கு புறப்பட்டார். பஸ்சில் தெங்கன்குழி வந்திறங்கிய ராயப்பன் அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்றார்.
வீட்டிற்கு செல்லும் பாதையில் ரெயில்வே பாலம் தாண்டியதும் 3 அடி அகலமே கொண்ட குறுகிய பாதை உள்ளது. பாதையின் ஒரு புறம் 20 அடி ஆழ பள்ளமும் காணப்படுகிறது.
இந்த பாதை வழியாக ராயப்பன் நடந்து சென்ற போது எதிர்பாரதவிதமாக பள்ளத்தில் விழுந்தார். இதில் தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.
பள்ளத்திற்குள் இருந்து ராயப்பன் எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் பள்ளத்தில் இறங்கி ராயப்பனை மீட்டனர். பின்னர் அவரை தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்றிரவு ராயப்பன் பரிதாபமாக இறந்தார்.








