குமரி மாவட்டத்தில் விவசாயம்,மீன்பிடித்தலுடன் ரப்பர் தோட்டமும் முக்கியமானது. மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் 1960-ஆம் ஆண்டு முதல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் அரசு ரப்பர் கழகம் செயல்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் 9 கோட்டங்களாகச் செயல்பட்டு வந்த இக்கழகம், நிர்வாக வசதிக்காக தற்போது 4 கோட்டங்களாகச் சுருக்கப்பட்டுள்ளது.
இந்த 4 கோட்டங்களிலும் சேர்த்து சுமார் 1,000-க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தொழிலாளர்களின் முந்தைய ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 2025 நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பிலும் நிர்வாகத்திற்கு முன்னதாகவே கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
இருப்பினும், கடந்த 10 மாதங்களாக நிர்வாகத் தரப்பில் எவ்வித முன்னேற்றமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒருநாள் ஊதியம் 1000 ரூபாய் உறுதி வழங்கக் கேட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுதும் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவிலில் அரசு ரப்பர் கழக தலைமை அலுவலகத்தையும் முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு நாள் வேலைநிறுத்தம் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய ₹30 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தினமும் போராட்டம் நடத்தும் சூழ்நிலையை உருவாக்காமல், உடனடியாக நிர்வாகமும் தமிழக அரசும் தலையிட்டு தொழிலாளர்களின் ஊதியப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.














