ஸ்ரீவை அருகே அரசு பேருந்து கண்ணாடிகள் உடைப்பு

0
296

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள
பொன்னங்குறிச்சியில் இரண்டு அரசு பேருந்து கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்வதற்காக நள்ளிரவு 12:30 மணியளவில் பொன்னங்குறிச்சிக்கு வந்த அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்கியுள்ளனர். இதில் பேருந்தில் கண்ணாடி உடைந்து நொறுங்கி கீழே விழுந்தது. பேருந்தில் சுமார் 20 பயணிகள் இருந்த நிலையில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து பயணிகளை ஏற்றி செல்வதற்காக மற்றொரு அரசு பேருந்து பொன்னக்குறிச்சி சென்றது. அங்கிருந்த பயணிகளை ஏற்றி சென்ற நிலையில் அந்த பேருந்து மீதும் கல் வீசி தாக்கிவிட்டு மர்மநபர்கள் தப்பி ஓடி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இரண்டு அரசு பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களின் புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர். கண்ணாடிகள் உடைக்கப்பட்ட அரசு பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் இரண்டு அரசு பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here