திருநெல்வேலி – திருச்செந்தூர் மெயின் ரோட்டில் வெள்ளூர் ஆதிச்சநல்லூர் அருகே சாலையோரமாக மா, தென்னை மரங்கள் வளர்ந்திருக்கும் ஒன்றரை ஏக்கர் நீர் புறம்போக்கு நிலம் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் அந்த ஆக்கிரமிப்பை அகற்றி நிலம் மீட்கப்பட்டது. அந்நிலத்தில் வருவாய்த் துறையினர் எச்சரிக்கை பேனரும் வைத்திருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் அந்த நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். வருவாய்த்துறையினர் வைத்திருந்த எச்சரிக்கை பேனரையும் கிழித்துள்ளனர்.
இதனால் அரசுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டிருப்பதோடு, அந்த வழியாக திருச்செந்தூருக்கு ஆன்மீக பயணம் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக தங்கிச் செல்லும் வாய்ப்பும் பறிபோய் இருக்கிறது.

எனவே, கலெக்டர் நேரடியாக தலையிட்டு அந்த ஆக்கிரமிப்பை அகற்றவும், அரசு உத்தரவை மீறி மீண்டும், மீண்டும் பொது நிலத்தை ஆக்கிரமித்ததோடு, அதிகாரிகள் வைத்த பேனரையும் கிழித்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும், காவல், வருவாய் துறைகளில் பணிபுரியும் உறவினர்கள் ஒத்துழைப்புடனேயே ஆக்கிரமிப்பாளர்கள் இந்த அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபடுவதால், அந்த கருப்பு ஆடுகள் மீதும் சட்டம் பாய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.








